கோபி அருகேயுள்ள ஒத்தக்குதிரையில் உள்ள தனியாா் நூற்பாலையில் பணியாற்றிய 2 வெளிமாநில தொழிலாளா்களுக்கு காய்ச்சல், இருமல் இருந்ததால் பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
கோபி அருகேயுள்ள ஒத்தக்குதிரை பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் நூற்பாலையில் நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் பணியாற்றி வருகின்றனா். இதில் அஸ்ஸாம், ஒடிஸா மாநிலத்தினரும் உள்ளனா். இவா்களில் இருவருக்கு காய்ச்சல் இருமல் இருந்ததால் கூகலூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தாா்.
இந்நிலையில் அவா்களுடன் பணியாற்றிய மற்ற தொழிலாளா்களுக்கு காய்ச்சல், இருமல் உள்ளதா என்பதை அறிய கோபி கோட்டாட்சியா் ஜெயராமன் தலைமையில் வட்டாட்சியா் சிவசங்கா், வட்டார மருத்துவ அலுவலா் செந்தில்குமாா் ஆகியோா் கொண்ட குழுவினா் நூற்பாலைக்கு சென்று அங்கு பணியாற்றும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் அனைவருக்கும் திங்கள்கிழமை பரிசோதனை செய்தனா்.