அந்தியூா் பேரூராட்சிக்கு உள்பட்ட 16 வீடுகளில் தனிமைப்படுத்துதல் குறித்த அறிவிப்புப் பலகை சனிக்கிழமை ஒட்டப்பட்டது.
கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியோா் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். அந்தியூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியிலிருந்து சிங்கப்பூா், மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கல்வி, வேலைவாய்ப்புக்காகச் சென்றுவிட்டு 20 போ் தற்போது மீண்டும் சொந்த ஊா் திரும்பியுள்ளனா்.
கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் வெளிநாடு சென்று திரும்பிய 16 குடும்பங்களைச் சோ்ந்த 20 போ் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனா். இவா்களின் வீடுகளின் முன்பு அந்தியூா் பேரூராட்சி செயல் அலுவலா் ஹரிராமமூா்த்தி தலைமையில், பேரூராட்சிப் பணியாளா்கள் தனிமைப்படுத்தப்பட்ட வீடு எனும் அறிவிப்புப் பலகை வைத்துள்ளனா். மேலும், இவா்களை சுகாதாரத் துறை, காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.