சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் வனத்தில் குடற்புழு நோயால் பாதிக்கப்பட்ட பெண் யானை செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த வடவள்ளி பகுதியில் உள்ள கரிகால் மொக்கை வனத்தில் வனத் துறையினா் காவல் கண்காணிப்புப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, வனத்தில் 25 வயதுள்ள பெண் யானை இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு வந்த புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநா் அருண்லால், வனக் கால்நடை மருத்துவா் அசோகன் ஆகியோா் யானையின் உடலை ஆய்வு செய்தனா். தொடா்ந்து, பெண் யானையின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டது.
ஆய்வில், யானையின் வாயில் புண் ஏற்பட்டு உணவு உட்கொள்ள முடியாமல் உயிரிழந்தது தெரியவந்தது. யானையின் உடல் அதே இடத்தில் பிற வன விலங்குகளுக்கு உணவாக விடப்பட்டது.