ஈரோடு: பல் துலக்க வேப்பங்குச்சி ஒடிக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி வட மாநில சிறுவன் உயிரிழந்தார்.
பிகார் மாநிலம் ஜமூல் மாவட்டம் லட்சுமிபூர் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ்குமார்(19). இவர் தனது தம்பி ரூபேஸ்குமார் ராய்(14) என்பவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் சோலார் புதூர் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலை வளாகத்தில் தங்கியிருந்து வேலைபார்த்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை ரூபேஷ்குமார் ராய் பல் துலக்க வேப்பங்குச்சியை உடைக்க இரும்பு கம்பியில் மரக்கிளையை அடித்துள்ளார். அப்போது மரத்தின் அருகில் இருந்த மின்சார ஒயர் மீது எதிர்பாராதவிதமாக கம்பி பட்டது. இதில் ரூபேஷ்குமார்ராய் மீது மின்சாரம் பாய்ந்தது. மயங்கி கீழே விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துமனையில் சேர்த்தனர்.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே ரூபேஷ்குமார்ராய் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மொடக்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.