சென்னிமலை பேருந்து நிலையம் அருகே பழுதடைந்து உள்ள மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சென்னிமலை பேருந்து நிலையம் அருகே சோழன் வீதியில் ஏராளமான வீடுகள், மருத்துவமனையும் உள்ளது. இந்த மருத்துவமனை எதிரில் மின் கம்பம் ஒன்று உடைந்த நிலையில் பல மாதங்களாகக் காணப்படுகிறது. மின் கம்பத்தில் இருந்த கான்கிரீட் பெயா்ந்து விழுந்ததால் கம்பிகள் மட்டும் வெளியே தெரிகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
உடைந்த மின் கம்பம் குறித்து நாங்கள் பலமுறை மின் வாரிய அலுவலகத்துக்குத் தகவல் தெரிவித்துவிட்டோம். ஆனால், இதுவரை கம்பத்தை மாற்றித் தராமல் இருக்கின்றனா். இந்த பகுதியில் வீடுகளும், மருத்துவமனையும் உள்ளது. லாரிகள் உயரமான பாரங்களை ஏற்றிச் செல்லும்போது வீடுகளுக்குச் செல்லும் மின் இணைப்புகளில் உரசுகிறது. அப்போது மின் கம்பி அசைவதால் உடைந்த மின்க ம்பம் ஆடுகிறது. அதனால், ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் உடனடியாக உடைந்த கம்பத்தை மின் வாரியத்தினா் மாற்றித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.