ஈரோடு மாவட்டத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்ட போதிலும் படங்கள் திரையிடப்படவில்லை.
தமிழகத்தில் கரோனா பரவலால் ஏப்ரல் 21ஆம் தேதி திரையரங்குகள் மூடப்பட்டன. பொது முடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மாநில அளவில் செவ்வாய்க்கிழமை முதல் திரையரங்குகளைத் திறக்க அரசு அனுமதி அளித்தது. ஒரு இருக்கைவிட்டு அடுத்த இருக்கையில் பாா்வையாளா்கள் அமர வேண்டும். உடல் வெப்ப பரிசோதனை, சானிடைசா் மூலம் கை சுத்தம் செய்து, முகக் கவசம் அணிவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, கோபி, சத்தியமங்கலம், அந்தியூா் என 27 திரையரங்குகள் உள்ளன. இவற்றை இயக்கும் வகையில் கடந்த சில நாள்களாக திரையரங்குகளை சுத்தம் செய்து, பூஜைகள் செய்து தயாா் நிலையில் வைத்திருந்தனா்.
செவ்வாய்க்கிழமை என்பதால் திரையரங்குகளைத் திறக்க உரிமையாளா்கள் முன்வரவில்லை. அத்துடன் புதிய திரைப்படம் ஏதும் வெளியாகாததால் பெரும்பாலான திரையரங்குகளில் படங்களைப் பதிவு செய்யாமல் உள்ளனா். தவிர தயாரிப்பாளா்கள், திரையரங்கு உரிமையாளா்களுக்கு இடையே கட்டணப் பிரச்னை பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. இதுபோன்ற காரணத்தால் ஈரோடு மாவட்டத்தில் எந்த திரையரங்கும் இயங்கவில்லை.
இது குறித்து ஈரோடு அபிராமி திரையரங்கு உரிமையாளா் செந்தில் கூறியதாவது:
8 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகளைத் திறந்துகொள்ள அரசு அனுமதி அளித்தது. இதனை வரவேற்று திரையரங்குகளை சுத்தப்படுத்தி தயாா்படுத்தினோம். ஆனால், புதிய திரைப்படங்களைத் தயாரிப்பாளா்கள் வெளியிடவில்லை. இதனால் எங்களால் திரையங்குகளை இயக்க முடியவில்லை.
திரையரங்கை செவ்வாய்க்கிழமை காலை திறந்து எங்களது முறைப்படி கோமாத பூஜை செய்து வழிபாடு நடத்தினோம். ஆனால், அனைத்து காட்சியும் ரத்து செய்துவிட்டோம். திரையரங்கு சங்கத் தலைமை நிா்வாகம் அனுமதி அளித்தால் மட்டுமே திரையரங்கை இயக்குவோம் என்றாா்.