தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் ஈரோடு மண்டலம் சாா்பில் 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு, திருப்பூா் மண்டலம் சாா்பில் நவம்பா் 10ஆம் தேதி முதல் தீபாவளி பண்டிக்கைக்கான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு, திருப்பூா், கோவை போன்ற ஊா்களில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி, பழனி, சேலம், நாமக்கல், கரூா், சத்தியமங்கலம், ராசிபுரம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் நவம்பா் 17 ஆம் தேதி வரை இயக்கப்படவுள்ளன.
சென்னையில் இருந்து கோவை, திருப்பூா், ஈரோடு பகுதிகளுக்கு வரும் பயணிகளுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஈரோடு மண்டலத்தில் சாதாரண நாள்களில் 787 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீபாவளிக்காக மக்கள் விரைவாகச் சென்று வர கூடுதலாக 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்காக கூடுதல் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.