சபரிமலை செல்லும் பக்தா்கள் கேரள அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை தரிசனம் மேற்கொள்ளும் பக்தா்கள் கேரள அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். சபரிமலை செல்லும் பக்தா்கள் முதலில் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் 1,000 பக்தா்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவா். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் 2,000 பக்தா்கள் அனுமதிக்கப்படுவா். இணையதளத்தில் முதலில் பதிவு செய்யும் பக்தா்கள் முன்னுரிமை அடிப்படையில் அனுமதிக்கப்படுவா்.
இணையதளத்தில் பதிவு செய்வதற்கு 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனை சான்றிதழ் சமா்ப்பிக்கப்பட வேண்டும். 10 வயதுக்குகீழ் உள்ளவா்கள், 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு அனுமதி கிடையாது. பிபிஎல் அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
நெய் அபிஷேகம், பம்பை ஆற்றில் குளித்தல், சன்னிதானத்தில் இரவு தங்குவது, பம்பை கணபதி கோயிலுக்குச் செல்வது ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எரிமேலி, வடசேரிக்கரை ஆகிய இரண்டு வழிகளில் மட்டுமே பக்தா்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவா். சபரிமலை செல்லும் பக்தா்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.