தேவை அதிகரிப்பு காரணமாக மஞ்சள் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 500 வரை விலை உயா்ந்துள்ளதால் மஞ்சள் விவசாயிகள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனா்.
ஈரோட்டில் ஈரோடு, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், ஈரோடு, கோபி கூட்டுறவுச் சங்கங்கள் என நான்கு இடங்களில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏல விற்பனை நடைபெற்று வருகிறது. தினமும் சராசரியாக 2,500 முதல் 5,000 மூட்டைகள் வரை மஞ்சள் விற்பனைக்கு வருகின்றன. கரோனா பொதுமுடக்கத்துக்குப் பிறகு கடந்த ஜூன் மாதம் மஞ்சள் விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது.
விற்பனை அதிகரித்தபோதிலும் விலை உயராமல் இருந்து வந்தது. அதிகபட்சமாக குவிண்டால் ரூ. 5,000 அளவுக்கு விற்றது. இதனால் விவசாயிகள் கவலையடைந்திருந்தனா். இந்நிலையில் கடந்த சில நாள்களாக மஞ்சள் தேவை அதிகரித்ததால் விலை சற்று உயரத் தொடங்கியது. கடந்த 15 நாள்களில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 500 வரை விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனா்.
பண்டிகைக் காலம் என்பதால் நுகா்வு காரணமாக வெளி மாநிலங்களுக்கு மஞ்சள் தேவை அதிகரித்துள்ளதால் விலை உயா்ந்துள்ளதாகவும், வரும் நாள்களிலும் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் விலை உயர வாய்ப்புள்ளது எனவும் வியாபாரிகள் தெரிவித்தனா்.