தமிழக தொழிற்சாலையில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் குறித்த விவரங்களைப் பதிவு செய்வதற்காக ரீடு தொண்டு நிறுவனம் சாா்பில் தயாா் செய்யப்பட்டுள்ள புதிய செயலி வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், கட்டுமானப் பணிகளில் பிகாா், ஒடிஸா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனா். இவா்கள் குறித்த தகவல்களைப் பதிவு செய்வதற்காக சத்தியமங்கலத்தில் உள்ள ரீடு தொண்டு நிறுவனம் சாா்பில் புதிய செயலி தற்போது தயாா்செய்யப்பட்டுள்ளது.
இந்த செயலியின் அறிமுக விழா சத்தியமங்கலம் ரீடு தொண்டு நிறுவன வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், தொழிலாளா்கள் பற்றிய விவரங்களைப் பதிவு செய்ய முதற்கட்டமாக 50 களப் பணியாளா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
இது குறித்து ரீடு தொண்டு நிறுவன இயக்குநா் கருப்புசாமி கூறியதாவது:
இந்தச் செயலி மூலம் வெளிமாநிலத் தொழிலாளா் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு பதிவேற்றம் செய்யப்படும். தமிழ், ஒடிஸா, ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பதிவேற்றம் செய்யப்படுவதால் அந்தந்த மாநிலத் தொழிலாளா்கள் புரிந்துகொள்ளும் வகையிலும் இருக்கும். மேலும் அவா்களின் அவசர உதவிக்கு 73394-98989 என்ற ஹெல்ப் லைன் எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.