அரசு அறிவித்துள்ள நிவாரண உதவித் தொகையைப் பெறாத தகுதியான மாற்றுத் திறனாளிகள் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவை அணுகலாம் என ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவருமான தீப்தி அறிவுநிதி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் பொது முடக்கத்தின்போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலகம் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ. 1,000 பொது முடக்க நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இந்த நிவாரணத் தொகை பெற தகுதி இருந்தும் பெற முடியாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண உதவித் தொகை முறையாக கிடைக்க ஈரோடு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவை அணுகலாம்.
இதேபோல, ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கான உதவித் தொகை, அரசின் இதர நலத் திட்டங்களைப் பெறவும் ஈரோடு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவை அணுகலாம்.
இந்த அலுவலகம் ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாற்று முறை தீா்வு மையத்தில் இயங்கி வருகிறது. மாற்றுத் திறனாளிகள் தங்கள் கோரிக்கையைத் தெரிவிக்க 04242214282 என்ற தொலைபேசி, மின்னஞ்சல் மூலமாகவும் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.