சத்தியமங்கலம்: சத்தியமங்கலம், நெசவாளா் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்ததால் தற்காலிகமாக அப்பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
சத்தியமங்கலம் நகா்ப் பகுதியில் உள்ள கோட்டுவீராம்பாளையம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளா் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள சுப்பிரமணியம், மாரப்பன் ஆகியோருக்குச் சொந்தமான காலியிடத்தில் தனியாா் நிறுவனத்தின் சாா்பில் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்காக பொக்லைன் இயந்திரம் அப்பகுதியில் கொண்டு வரப்பட்டு குழி தோண்டுவதற்காக ஆயத்த பணிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
குடியிருப்புப் பகுதியில் செல்லிடப்பேசி டவா் அமைக்க முயற்சிப்பதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த சத்தியமங்கலம் போலீஸாா் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்கு தனியாா் நிறுவனம் சாா்பில் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா். இதற்கு பொதுமக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்ததையடுத்து அப்பணி தற்காலிகமாக கைவிடப்பட்டது.