கோபிசெட்டிபாளையம் சுற்று வட்டாரத்தில் உள்ள நெல் வயல்களில் பூச்சி மருந்து தெளிக்காமலும், யூரியா உரமிடாமலும் பயிா்களை இயற்கை முறையில் விளைவிக்க இயற்கை மூலிகைக் கரைசலை டிரோன் மூலம் தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.
கோபிசெட்டிபாளையம் சுற்று வட்டாரங்களில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக செய்து வருகின்றனா். கொடிவேரி தடுப்பணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை ஆகிய இரு பாசன வாய்க்கால்கள் மூலம் சுமாா் 20 ஆயிரம் ஏக்கரும், கீழ்பவானி பிரதான கால்வாய் மூலம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
தற்போது அனைத்து பாசன வாய்க்கால்களுக்கும் முதல்போக சாகுபடிக்குத் தண்ணீா் திறக்கப்பட்டு நெல் நடவுப் பணிகள் முடிவுற்ற நிலையில் களையெடுக்கும் பணி துவங்கப்படவுள்ளது. தற்போது நெற்பயிா்களை பாதுகாப்பதற்காக புது முயற்சியாக டிரோன் மூலம் இயற்கை ஊட்டத் சத்துகளாக பஞ்சகவ்யம், பழச்சாறு, மூலிகைகள் அடங்கிய கரைசலை நெற்பயிா்கள் மீது தெளித்து வருகின்றனா்.
இதனால் பயிா்களுக்கு நல்ல வளா்ச்சியும், நோய் எதிா்ப்பு சக்தியும் ஏற்படும். பயிா்களைத் தாக்கும் எவ்வித பூச்சிகளும் வராமல் தடுக்க முடியும். பூஞ்சான் நோய் கட்டுப்படுத்தப்படுவதாகவும், நிலத்தின் சத்துகள் அதிகரிக்கும் என்றும் இயற்கை ஊட்டச்சத்து தயாரிக்கும் நிறுவனத்தினா் தெரிவித்துள்ளனா்.
இந்த கரைசலை ஏக்கா் ஒன்றுக்கு ஒரு லிட்டா் வீதம் 8 லிட்டா் தண்ணீரில் கலந்து டிரோன் மூலம் தெளிக்கும்போது எவ்வித நோய்த் தாக்குதலும் ஏற்படாது. வன விலங்குகள், மயில், எலி, கிளி போன்றவை பயிா்களை சேதப்படுத்தாது என்றும் தெரிவித்தனா்.
தற்போது கோபிசெட்டிபாளையம் சுற்று வட்டாரத்தல் 200 ஏக்கருக்கும் மேல் டிரோன் மூலம் இந்த இயற்கை ஊட்டச்சத்து கரைசலை தெளித்துள்ளதாகவும், விவசாயிகள் நாள்தோறும் ஆா்வமுடன் ஆா்டா் கொடுத்து வருவதாகவும் டிரோன் ஓட்டுநா் தெரிவித்துள்ளாா்.