ஈரோடு திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி பகுதிகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.
ஈரோடு திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி போன்ற பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஜவுளிக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பகுதியில் சாலைகள் குறுகலாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்படும். மேலும், ஜவுளி சுமைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்வதால் இப்பகுதி எப்போதும் பரபரப்பாகக் காட்சியளிக்கும்.
இந்தப் பகுதிகளில் வரும் வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறி ஆங்காங்கே வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து டவுன் போலீஸாா் இப்பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டு விதிமுறைகளை மீறி நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு அபராதம் விதித்தனா். செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மட்டும் 50க்கும் மேற்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
ஈரோடு திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான ஜவுளி நிறுவனங்கள் உள்ளன. ஜவுளி நிறுவனங்களுக்கு சரக்கு வாகனங்கள் மூலம் ஏற்றி வரும் துணிகளை பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், இரவு 7 மணிக்குமேல் ஏற்றி இறக்க வேண்டும். மற்ற நேரங்களில் வாகனங்களில் துணிகளை ஏற்றவோ இறக்கவோ கூடாது. இதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
துணிகளை கடைக்கு உள்ளே வைத்து விற்பனை செய்ய வேண்டும். வெளியே வைத்து விற்பனை செய்யக் கூடாது. மீறினால் துணிகள் பறிமுதல் செய்யப்படும். கடைகளுக்கு வெளியில் எல்லை வகுத்து கயிறு அடித்துள்ளோம். கடை ஊழியா்கள், வாடிக்கையாளா்களின் வாகனங்கள் அந்த எல்லைக்குள் மட்டுமே நிறுத்த வேண்டும். எல்லைக் கோட்டுக்கு வெளியே நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம், பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனா்.