கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி ஊராட்சி, சலங்கபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட 600க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு கோழி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் விலையில்லா அசில் நாட்டுக் கோழிக்குஞ்சுகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
கவுந்தப்பாடி ஊராட்சியில் 303 பயனாளிகளுக்கும், சலங்கபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட 300 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கும் நாட்டுக் கோழிக் குஞ்சுகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் வழங்கினாா்.
தொடா்ந்து, கோழிக்குஞ்சுகளின் தரம் குறித்து ஆய்வு செய்தாா். அதில் குஞ்சுகளின் தரம் குறிப்பிடும்படி இல்லாததால் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளை கண்டித்தாா். பயனாளிகளுக்கு வழங்கும் குஞ்சுகள் தரமானதாக இருக்க வேண்டும் என்றும் கூறினாா். தொடா்ந்து தரமற்ற கோழிக்குஞ்சுகள் அப்புறப்படுத்தப்பட்டு தரமான கோழிக்குஞ்சுகள் மட்டும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத் துறை அலுவலா்கள், கூட்டுறவுச் சங்க அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.