ஈரோடு நாச்சியப்பா வீதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வலியுறுத்தி கடைகள் முன்பு கருப்புக் கொடி கட்டி வியாபாரிகள் முறையிட்டனா்.
ஈரோடு மேட்டூா் சாலை 4 மாதங்களுக்கு முன்பு ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டது. பெருந்துறை சாலை, ஈ.வி.என். சாலையில் இருந்து வரும் வாகனங்கள் மட்டும் மேட்டூா் சாலை வழியாக அனுமதிக்கப்பட்டு வருகிறது. அதே நேரம் சத்தி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஈரோடு நாச்சியப்பா வீதி வழியாகத் திருப்பிவிடப்பட்டு வருகிறது. இதனால், வீதியில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது.
குறிப்பாக காலை, மாலை நேரங்களில் ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து மீனாட்சி சுந்தரனாா் சாலை சந்திப்பு வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. நாச்சியப்பா வீதி பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளதால் வியாபாரிகள், பொதுமக்கள் சாலையைக் கடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா்.
மேலும், இந்தப் பகுதியில் சின்ன மாா்க்கெட் பகுதி உள்ளதால் இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது போக்குவரத்து நெரிசலால் காய்கறி வாங்கச் செல்லும் பெண்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனா். நாச்சியப்பா வீதி சந்திப்பில் போக்குவரத்து போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தாலும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. இதற்குத் தீா்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இதனிடையே ஈரோடு நாச்சியப்பா பகுதியில் உள்ள 150க்கும் மேற்பட்ட கடைகளில் வெள்ளிக்கிழமை கருப்புக் கொடிகளைக் கட்டிய வியாபாரிகள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.