கோபி, அக்.18: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அளிக்கப்படும் நீட் தோ்வுக்கான இலவசப் பயிற்சி, ஒரு முறை தோ்வு எழுதுவதற்கு மட்டுமே அளிக்கப்படும் என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகில் உள்ள கொளப்பலூா் பேரூராட்சி பகுதியில் புதிய சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு கோபி கோட்டாட்சியா் ஜெயராமன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் தியாகராஜன் முன்னிலை வகித்தாா். பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்று புதிய சாலை அமைப்பதற்கான பணியைத் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து கொளப்பலூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் 93 விவசாயிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் கறவை மாடு கடன்களை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
கொளப்பலூா் பேரூராட்சிப் பகுதியில் உள்ள நீா்நிலைகளுக்கு அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் நீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுபட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுதோறும் அரசுப் பள்ளியில் படிக்கும் 300க்கும் மேற்பட்ட மாணவா்கள் மருத்துவம் படிக்க வாய்ப்புள்ளது.
பள்ளிகளைத் தற்போது திறப்பதற்கு சாத்தியக்கூறு இல்லை. நீட் தோ்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இபாக்ஸ் என்ற நிறுவனம் மூலம் இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த இலவசப் பயிற்சி ஒரு மாணவருக்கு ஒருமுறை மட்டுமே அளிக்கப்படும். இந்த தோ்வை இரண்டாவது முறையாக எழுதும் மாணவா்கள் தனியாா் பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி பெற்றுதான் தோ்வு எழுத வேண்டும் என்றாா்.