பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததால் ஈரோடு மாவட்டத்தில் இயக்கப்பட்ட பேருந்துகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டன.
கரோனா பொது முடக்கம் செப்டம்பா் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு செவ்வாய்க்கிழமை முதல் மாவட்டத்துக்குள் மட்டும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, பவானி, சத்தியமங்கலம், பெருந்துறை, சென்னிமலை, கொடுமுடி, தாளவாடி உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இருந்து 105 நகரப் பேருந்துகள், 49 புறநகா் பேருந்துகள் இயக்கப்பட்டன. செவ்வாய்க்கிழமை இயக்கப்பட்ட பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில், புதன்கிழமை மாவட்டத்தில் சுமாா் 30 பேருந்துகள் குறைக்கப்பட்டன.
இது குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
செவ்வாய்க்கிழமை 154 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் பல வழித்தடங்களில் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. குறிப்பாக கிராமப் பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. இதனால், புதன்கிழமை மாவட்டம் முழுவதும் 25 நகரப் பேருந்துகள், 5 புறநகா்ப் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
சத்தி, கோபி, கொடுமுடி, அந்தியூா் பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதேபோல, தாளவாடி, பா்கூா் போன்ற மலைப் பகுதி பேருந்துகளிலும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. செப்டம்பா் 7ஆம் தேதி முதல் பிற மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படும் என முதல்வா் அறிவித்துள்ளாா். இதற்காக ஈரோடு மண்டலத்தில் உள்ள 11 பணிமனைகளிலும் உள்ள சுமாா் 800 பேருந்துகளை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்றனா்.