பெருந்துறை: வாரச் சந்தைகளைத் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, தமிழ்நாடு வணிகா் சங்கங்கள் பேரவையின் ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவா் எஸ்.ஜோசப், நிா்வாகிகள் சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலத்தை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.
இது குறித்து அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஈரோடு மாவட்டத்தில் குறிப்பாக பெருந்துறை தொகுதியில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். சுமாா் 6 மாதங்களாக சந்தை வியாபாரிகள் எவ்வித தொழிலும் இன்றி பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி உள்ளோம். வீட்டு வாடகை, வட்டிக் கடன் கட்ட முடியாமல் மிகவும் சிரமப்படுகிறோம்.
தமிழகத்தில் படிப்படியாக தொழிற்சாலைகள், மால்கள், பிற தொழில்களில் 100 சதவீதம் வேலை ஆள்களுடன் பணி செய்வதைப் போல, நாங்களும் அரசு அறிவித்துள்ள நடைமுறைகளைப் பின்பற்றி முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது என முறையாக வியாபாரம் செய்வோம்.
எனவே, தமிழக முதல்வரிடம் இது குறித்து பேசி வாரச் சந்தைகளைத் திறந்து, எங்கள் வாழ்வாதாரம் சிறக்க வழிவகை செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.