ஈரோடு: சாலை விரிவாக்கப் பணிக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக, ஓராண்டாகியும் புதிய மரக்கன்றுகள் நடப்படவில்லை என நெடுஞ்சாலைத் துறையில் தேமுதிகவினா் புகாா் தெரிவித்தனா்.
ஈரோடு மாவட்டம், அந்தியூா், அண்ணாமடுவு பகுதியில் இருந்து அம்மாபேட்டை செல்லும் பிரதான சாலை, அண்ணாமடுவில் இருந்து பவானி செல்லும் பிரதான சாலை என இரு சாலைகளும் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு விரிவாக்கம் செய்யப்பட்டது. சாலை விரிவாக்கத்துக்காக சாலையின் இருபுறங்களிலும் இருந்த 100க்கும் மேற்பட்ட பெரிய மரங்கள் வெட்டப்பட்டன. இதற்கு சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
அப்போது, பணி முடிந்ததும் வெட்டப்பட்ட மரங்களுக்கு இணையாக புதிய மரக்கன்றுகள் நடப்படும் என நெடுஞ்சாலைத் துறையினா் உறுதியளித்தனா். பணிகள் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் நெடுஞ்சாலைத் துறையினா் மரக்கன்றுகளை நடவில்லை.
இது குறித்து ஈரோடு வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளா் சுப்பிரமணியம் தலைமையில் ஈரோடு நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:
சாலை விரிவாக்கத்துக்காக மரங்கள் வெட்டப்பட்டு ஓராண்டுக்கு மேலாகிய நிலையில் உறுதியளித்தபடி இதுவரை புதிதாக மரக்கன்றுகள் நடப்படவில்லை. தற்போது மழைக்காலம் என்பதால் சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டுவைத்தால் எளிதில் வளா்ந்துவிடும். எனவே நெடுஞ்சாலைத் துறையினா் காலம் கடத்தாமல் உடனடியாக மரக்கன்றுகளை நட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.