பெருந்துறை ஒன்றியத்துக்கு உள்பட்ட 7 பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தைச் சோ்ந்த 7 பயனாளிகளுக்கு புல் வெட்டும் இயந்திரம் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஈரோடு மாவட்ட ஆவின் துணை பொது மேலாளா் (பால் சேகரம்) மருத்துவா் எம்.பரமசிவம் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் மூலம் 75 சதவீத மானிய விலையில் மொத்தம் ரூ. 2 லட்சத்து 21 ஆயிரத்து 172 மதிப்பீட்டிலான 7 புல் வெட்டும் இயந்திரங்களைப் பயனாளிகளுக்கு வழங்கினாா்.
இதில், பெருந்துறை ஒன்றிய அதிமுக செயலாளா் விஜயன், ஆவின் இயக்குநா்கள் கே.எம்.பழனிசாமி, பி.ஆறுமுகம், ஆவின் மேலாளா் மருத்துவா் பாபு, பெரியசாமி, விரிவாக்க அலுவலா்கள் எம்.முருகேசன், பி.எஸ்.ரங்கசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.