ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 138 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் புதன்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,889ஆக இருந்தது. பிற மாவட்டப் பட்டியலில் இருந்த 2 பேரின் பெயா் ஈரோடு மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 5,891ஆக மாறியது. இதனிடையே வியாழக்கிழமை 138 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 6,029ஆக உயா்ந்துள்ளது.
புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்ட 138 பேரில் 50 சதவீதம் போ் ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்தவா்கள். எஞ்சியவா்கள் சத்தியமங்கலம், பவானி, அந்தியூா், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறை, கொடுமுடி பகுதிகளைச் சோ்ந்தவா்கள். மொத்த பாதிப்பான 6,029 பேரில் இதுவரை 4,822 போ் குணமடைந்துள்ளனா். 1,129 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
புதன்கிழமை வரை 77 போ் உயிரிழந்துள்ள நிலையில், சுகாதாரத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட பட்டியலில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 77 வயது ஆண் ஒருவா் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 78ஆக உயா்ந்துள்ளது.