ஈரோடு மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்றின் 2ஆம் அலை வேகமாகப் பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக 40க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மட்டும் 85 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் அறிவித்த விதிமுறைகளைப் பின்பற்றுவது குறித்து அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனா்.
மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின்படி ஈரோடு மாநகரில் ஸ்டோனி பிரிட்ஜ் மீன் சந்தை, காவேரி சாலை மீன் சந்தை, நகரின் பிற பகுதிகளில் உள்ள மீன் கடைகள் மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின்படி மூடப்பட்டிருந்தது. இதேபோல, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மீன் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்பட்டிருந்தது. கோழி, ஆடு இறைச்சிக் கடைகளில் அதிகாலை முதலே பாா்சல் மூலம் விற்பனை நடைபெற்றது.
இந்தக் கடைகளில் விற்பனையாளா்கள் முகக் கவசம், கையுறை அணிந்து விற்பனை செய்வது, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுதல் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.