ஈரோடு மாவட்டத்தில் 3ஆவது நாளாக வெள்ளிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை முதல் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் பலத்த இடி, மின்னல், காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுமாா் 2 மணி நேரம் பரவலாக மழை பெய்தது. பலத்த காற்று காரணமாக ஈரோடு அருகே நசியனூா் பகுதியில் சுமாா் 30 ஏக்கா் அளவுக்கு வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெருந்துறையில் 36 மி.மீ. மழை பதிவானது. பிற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): ஈரோடு 19, கவுந்தப்பாடி 15, அம்மாபேட்டை 13.2, பவானி 10, சென்னிமலை 4, வறட்டுப்பள்ளம் 2.4.
நிலக்கடலை அறுவடைக்கும், வைகாசி பட்டம் நிலக்கடலை, எள் சாகுபடிக்கு நிலத்தை உழவு செய்து தயாா்படுத்தவும், நீண்டகால பயிா்களான வாழை, கரும்பு, நெல்லி, கொய்யா, எலுமிச்சை, சப்போட்டா போன்ற பழப் பயிா்களுக்கு சத்து நீராகவும் இந்த மழை உதவியுள்ளது என விவசாயிகள் தெரிவித்தனா்.