சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியில் யானைகள் சாலையைக் கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாகச் செல்லுமாறு வனத் துறை எச்சரித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. வனப் பகுதியில் தற்போது கடுமையான வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் குடிநீா், தீவனம் தேடி வனப் பகுதி சாலையோரம் சுற்றித் திரிகின்றன.
இந்நிலையில், சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அருகே புதுகுய்யனூா் பிரிவு என்ற இடத்தில் காட்டு யானைகள் கூட்டமாக சனிக்கிழமை சாலையைக் கடந்து சென்றன. அப்போது அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் யானைகள் சாலையைக் கடந்து செல்வதைக் கண்டு வாகனங்களை நிறுத்தினா். யானைகள் வனப் பகுதிக்குள் சென்ற பின்னா் புறப்பட்டுச் சென்றனா். பகல் நேரங்களில் காட்டு யானைகள் சாலையைக் கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்குமாறு வனத் துறையினா் அறிவுறுத்தி வருகின்றனா்.