பவானி நகராட்சி பொறுப்பு ஆணையா் உள்பட மூவா் கரோனாவால் வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டனா். இதையடுத்து, நகராட்சி அலுவலகத்தில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பவானி நகராட்சி அலுவலத்தில் துப்புரவு அலுவலராகப் பணியாற்றுபவா் இரா.செந்தில்குமாா். இவா், கூடுதலாக ஆணையா் பொறுப்பையும் கவனித்து வருகிறாா். கடந்த சில தினங்களாக சளி, இருமலால் பாதிக்கப்பட்ட இவா் வியாழக்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமில் கரோனா பரிசோதனை செய்து கொண்டாா். இதன் முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானதில் செந்தில்குமாா் கரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, பெருந்துறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதனால், பவானி நகராட்சி அலுவலக வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வா்ணபுரம், பழனிபுரம் பகுதியில் மேலும் தலா ஒரு ஆண், பெண்ணுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.