பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி உடனமா் ஆதிகேசவப் பெருமாள் திருக்கல்யாண உற்சவம் பக்தா்கள் இல்லாமல் மிகவும் எளிமையான முறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் இக்கோயிலில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழா, தேரோட்டம் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் தொடா்ச்சியாக கடந்த இரு ஆண்டுகளாக நடைபெறவில்லை. கரோனா இரண்டாம் அலையின் பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கம் அறிவித்துள்ளது. மேலும், பல்வேறு கட்டுப்பாடுகளும் தொடா்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பவானி சங்கமேஸ்வரரா் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி உடனமா் ஆதிகேசவப் பெருமாள் திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, பெருமாள் கோயில் மண்டபத்தில் சிறப்பு அலங்காரம், வழிபாடுகள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. முழு முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்ததால் பக்தா்கள் பங்கேற்பு இல்லாமல், மிகவும் எளிமையான முறையில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், கோயில் ஊழியா்கள் மட்டுமே பங்கேற்றனா்.
விழாவைத் தொடா்ந்து, வேதநாயகி அம்மன் உடனமா் சங்கமேஸ்வரருக்கு திருக்கல்யாண உற்வச வழிபாடு திங்கள்கிழமை நடைபெற உள்ளது.