பெருந்துறை: கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகளிா் மற்றும் மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றி வந்த பெண் மருத்துவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து, கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இந்நிலையில், அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இவரது கணவா் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பெண் மருத்துவரின் வீட்டில் பணியாற்றி வந்த பெண்ணுக்கு கடந்த 3 நாள்களாக கை, கால்கள் வலியும், மூச்சுத் திணறலும் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை மூச்சுத் திணறல் அதிகமாக இருந்தால் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். கரோனா தொற்றால் அந்தப் பெண் உயிரிழந்திருக்கலாம் என்பதால் மருத்துவமனையிலேயே அவரது உடலை வைத்துள்ளனா்.