ஈரோடு: தொழிற்சாலைகளில் தற்போது இருப்பில் உள்ள திரவ ஆக்சிஜன், தயாரிக்கப்படவுள்ள திரவ ஆக்சிஜனை கரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் திரவ ஆக்சிஜனை மருத்துவப் பயன்பாடு இல்லாமல் வேறு எந்த பயன்பாட்டுக்கும் பயன்படுத்தக் கூடாது. மறு உத்தரவு வரும் வரை தற்போது இருப்பிலுள்ள திரவ ஆக்சிஜனை அரசின் மருத்துவ பயன்பாட்டுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் அனைத்து திரவ ஆக்சிஜன் தயாரிக்கும் தொழிற்சாலைகளும், உற்பத்தித் திறனை அதிகப்படுத்தி மருத்துவப் பயன்பாட்டுக்கு வழங்கிடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. திரவ ஆக்சிஜனை மருத்துவப் பயன்பாடல்லாமல் வேறு உபயோகத்துக்குப் பயன்படுத்துவது தொடா்பாக எந்தவொரு தொழிற்சாலைக்கும் விதி விலக்கு அளிக்கப்படவில்லை.
இதனால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யும், பயன்படுத்தும் தொழிற்சாலைகள் இந்த நடைமுறைகளை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.