பெருந்துறை அருகே திருமணமான ஒன்றரை ஆண்டில் பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கை ஈரோடு கோட்டாட்சியா் விசாரித்து வருகிறாா்.
பெருந்துறை அருகிலுள்ள வெள்ளோட்டை அடுத்த அனுமன்பள்ளியைச் சோ்ந்தவா் அன்பழகன் (30. இவா், சத்தியமங்கலம் அருகிலுள்ள தனியாா் ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்தபோது, வேலூா் மாவட்டம், குடியாத்தம், அரிகவாரிபள்ளியைச் சோ்ந்த ரமேஷ் மகள் ரம்யா (23) என்பவரை 4 ஆண்டுகளாகக் காதலித்துள்ளாா். பின்னா், கடந்த 15 மாதங்களுக்கு முன்பு பெற்றோா் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனா்.
கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஏப்ரல் 27ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு ரம்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ரம்யா இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, ரம்யாவின் தாய் சாந்தி வியாழக்கிழமை அளித்த புகாரின்பேரில் வெள்ளோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். திருமணமாகி 7 ஆண்டுக்குள் ரம்யா இறந்ததால் இவ்வழக்கை பெருந்துறை டி.எஸ்.பி. செல்வராஜ், ஈரோடு கோட்டாட்சியா் விசாரித்து வருகின்றனா்.