ஈரோடு மாநகரில் கட்டுப்பாட்டை மீறி திறக்கப்பட்ட 18 கடைகளுக்கு தலா ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டு, அதில் 5 கடைகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன.
ஈரோடு மாநகராட்சியில் கரோனா 3ஆவது அலையைக் கட்டுப்படுத்த கடந்த 9ஆம் தேதி முதல் நேரக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், பால், மருந்தகங்கள், ஹோட்டல்கள் தவிர பிற கடைகள் மாலை 5 மணிக்குமேல் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரக் கட்டுப்பாட்டை மீறி கடைகளைத் திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது நேரக் கட்டுப்பாட்டை மீறி திறக்கப்பட்டிருந்ததாக ஜவுளி, டீ கடைகள் என 18 கடைகளுக்கு தலா ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 5 கடைகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன. இதேபோல, முகக் கவசம் முறையாக அணியாத 117 பேருக்கு தலா ரூ. 200 என ரூ. 23,400 அபராதம் விதிக்கப்பட்டதாக மாநகராட்சி நல அலுவலா் டாக்டா் முரளிசங்கா் தெரிவித்தாா்.