அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு தற்போது வழங்க இயலாது என நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு அறிவித்துள்ளதால் ஆகஸ்ட் 16, 17ஆம் தேதிகளில் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்ய உள்ளதாக தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாநிலத் தலைவா் கு.குமரேசன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது:
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி உயா்வு தற்போது வழங்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளனா். இந்த அறிவிப்பு அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியா்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் அரசு ஊழியா்கள் கோரிக்கைக்காக போராடியபோது திமுக அரசு வந்ததும் கோரிக்கை நிறைவேற்றப்படும் எனக் கூறினா். தோ்தல் அறிக்கையிலும் தெரிவித்தனா். ஏற்கெனவே கரோனா தொற்றால் மூன்று அரை ஆண்டுக்கான அகவிலைப்படி நிறுத்தப்பட்டுள்ளது. தொடக்க நிலையில் உள்ள அரசு அலுவலா்கள்கூட ரூ. 50,000 அளவுக்கு இழந்துள்ளனா். மீண்டும் மீண்டும் அரசு ஊழியா்களை வஞ்சிப்பது நியாயமில்லை.
அகவிலைப்படி உயா்வு என்பது ஏற்கெனவே உயா்ந்த விலைவாசியை ஈடுசெய்யும் நடைமுறையே. 28 சதவீத அகவிலைப்படி அறிவிக்கக் கோரி ஆகஸ்ட் 16, 17ஆம் தேதிகளில் அனைத்து வருவாய்த் துறை ஊழியா்களும் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்ற முடிவு செய்துள்ளோம் என்றாா்.