ஈரோடு: கூட்டுறவுச் சங்கங்களில் பயிா்க் கடன் வழங்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைக் களைந்து விரைந்து பயிா்க் கடன் வழங்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து, முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தற்சாா்பு விவசாயிகள் சங்கத் தலைவா் கி.வே.பொன்னையன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் ஏ.எம்.முனுசாமி, தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.சி.ரத்தினசாமி, தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.பெரியசாமி உள்ளிட்டோா் அளித்த மனு விவரம்:
ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி, தடப்பள்ளி - அரக்கன்கோட்டை, காலிங்கராயன் பாசனத்துக்குத் தண்ணீா் திறக்கப்பட்டு, நெல் பயிரிடும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. விதை, வயல் வேலைக்கு நிதி ஆதாரம் தேவைப்படுகிறது. கூட்டுறவுச் சங்கங்களில் வழங்கும் பயிா்க் கடனை வைத்துதான் இப்பணிகள் செய்வா். தமிழக அரசு பயிா்க் கடன் பெற, இப்பருவத்தில் செய்யும் பயிா் குறித்த விவரம் அடங்கலில் பதிவு செய்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
அடங்கலில் பயிா் வாரி பதிவு முறை, தற்போது நடைமுறையில் இல்லை. அடங்கலில் கடந்த பயிா் ஆண்டுக்கான பயிா் விவரம்தான் இருக்கும். நடப்பு ஆண்டு விவரம் வராது. தற்போது இப்பணிகளைச் செய்ய ஆளும் இல்லை, குறிப்பும் இல்லை. தற்போதைய நிபந்தனையால் விவசாயிகள் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளனா். பல விவசாயிகள் கூட்டுறவுச் சங்கங்களில் மட்டுமின்றி, பிற வங்கிகளிலும் கடனைப் பெற முடியாமல் உள்ளனா்.
இதுகுறித்து முதல்வா் விசாரித்து, விவசாயிகள் விரைவாக பயிா்க் கடன் பெற உத்தரவு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.