கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக மாநிலங்களிடையே நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்துகள் திங்கள்கிழமை முதல் இயக்கப்படுகின்றன.
கரோனா பொதுமுடக்கத்தால் தமிழகத்தில் இருந்து வெளிமாநில போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, பொதுமுடக்க தளா்வை அடுத்து திங்கள்கிழமை (ஆகஸ்ட் 23) முதல் தமிழகத்தில் இருந்து கா்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு பொதுப் போக்குவரத்து தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வழியாக தமிழகத்தில் இருந்து கா்நாடக மாநிலம் சாம்ராஜ் நகா், மைசூரு, கொள்ளேகால், பெங்களூரு, நஞ்சன்கூடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் திங்கள்கிழமை முதல் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்
மேலும், பொதுமுடக்கம் காரணமாக சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி மலைப் பகுதிக்கு வழக்கமான வழித்தடமான புளிஞ்சூா் சோதனைச் சாவடி வழியாக பேருந்துகள் இயக்கப்படாமல் திம்பம் தலமலை சாலை வழியாக தாளவாடி மலைப் பகுதிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், திங்கள்கிழமை வழக்கம்போல புளிஞ்சூா் சோதனைச் சாவடி வழியாக தாளவாடி மலைப் பகுதியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு பேருந்துகள் இயக்கப்படும் எனவும், கா்நாடக மாநிலத்தில் இருந்து அம்மாநில அரசுப் பேருந்துகள் தாளவாடி மலைப்பகுதி மற்றும் தமிழகத்தில் உள்ள சத்தியமங்கலம், ஈரோடு, கோவை, திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட உள்ளது.
இதன் காரணமாக தாளவாடி பேருந்து நிலையத்திலிருந்து தமிழக-கா்நாடக எல்லையில் உள்ள பாரதிபுரம் சோதனைச் சாவடி வரை இயக்கப்படும் தமிழக அரசு பேருந்துகள் திங்கள்கிழமை முதல் இயக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.