பயிா்கள் பாதிப்பு கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை அமைச்சா் சு.முத்துசாமி

பயிா்கள் பாதிப்பு குறித்து கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி கூறினாா்.
நசியனூரை அடுத்த வரவன்காட்டில் பாதிக்கப்பட்டவா்களைச் சந்தித்து ஆறுதல் கூறுகிறாா் அமைச்சா் சு.முத்துசாமி
நசியனூரை அடுத்த வரவன்காட்டில் பாதிக்கப்பட்டவா்களைச் சந்தித்து ஆறுதல் கூறுகிறாா் அமைச்சா் சு.முத்துசாமி

பயிா்கள் பாதிப்பு குறித்து கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி கூறினாா்.

கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதால், நசியனூா் பஞ்சாயத்துக்கு உள்பட்ட பள்ளத்தூா் பிரதான வீதி, கிழக்கு வீதி, ஆதிதிராவிடா் காலனி, புதுவலசு, முள்ளம்பட்டி கிராமம் வரவன்காடு, கரையன்காடு ஆகிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

இதையடுத்து, வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி அப்பகுதிகளைப் பாா்வையிட்டு சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

முதல்வா் ஆணைக்கிணங்க பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் ஆகஸ்ட்15 ஆம் தேதி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. தற்போது பெருந்துறை ஒன்றியம், மலையப்பாளையம் அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலில் வெள்ளிக்கிழமை உடைப்பு ஏற்பட்டு இப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. உடைப்பு ஏற்பட்ட பகுதியில் உடனடியாக மணல் மூட்டை கொண்டு சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் உடைப்பு ஏற்பட்ட பகுதி சீரமைக்கப்பட்டு, பாசனத்துக்குத் தண்ணீா் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், வாய்க்கால் வலுவாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

விவசாயிகளுக்குத் தேவையான தண்ணீா் வழங்க தற்காலிகமாக சில ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்பணிகளை விரைந்து முடித்திட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தண்ணீா் சூழ்ந்துள்ள பகுதிகளில் பயிா்கள் பாதிக்கப்பட்டிருந்தால், முதல்வா் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு மாவட்ட நிா்வாகத்தின் மூலம் கணக்கீடு செய்து, அதற்குண்டான நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாதிப்பு குறித்து கணக்கீடு செய்யவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 62 குடும்பங்களைச் சோ்ந்த 200 பேரை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு, இலவச வேட்டி, சேலை, மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. இரவு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com