தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அதிமுகவினரால் அனுசரிக்கப்பட்டது. இதில், ஈரோட்டில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலக வளாகத்தில் ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கும், எம்ஜிஆர் உருவச்சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அவை தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநகர் மாவட்ட செயலாளர் ராமலிங்கம் கலந்து கொண்டு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினார்.
இதேபோல், ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் சந்திப்பில் உள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பாலகிருஷ்ணன், சிவசுப்பிரமணி, முன்னாள் எம்பி செல்வக்குமார சின்னையன், மாணவரணி செயலாளர் ரத்தன் பிரித்திவ், மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளர் வீரக்குமார், மாணவரணி இணை செயலாளர் நந்தகோபால், ஆவின் துணை தலைவர் குணசேகரன், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயர் பழனிசாமி, பகுதி செயலாளர் மனோகரன், ஜெகதீஸ், கேசவமூர்த்தி, பகுதி அவை தலைவர் மீன் ராஜா, மொடக்குறிச்சி யூனியன் சேர்மேன் கணபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.