பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அதிமுகவை அழிக்க வேண்டும் என தீவிரமாக இருப்பதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் தெரிவித்தார்.
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் ஈரோடு மாவட்ட வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் அக்கட்சியின் பொதுசெயலாளர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்த வேண்டிய 141 வளர்ச்சி திட்டங்கள் குறித்த அறிக்கையை தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி இடம் ஈஸ்வரன் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஈஸ்வரன், விவசாயிகள் பாதிக்கப்படுகின்ற எந்த திட்டமும் செயல்படுத்தப்படாது என்றும் விவசாயிகளின் கருத்து கேட்காமல், ஒப்புதல் இல்லாமல் நிலங்கள் கையகப்படுத்தப்படாது என்றார். மேலும் 7 பேர் விடுதலையில் தமிழக அரசின் நிலையில் எந்த மாற்றமும் கிடையாது என்றும் தமிழக அரசின் நிலைப்பாடு நிரந்தரமானது என்றார்.
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அதிமுக அழிக்க வேண்டும் என தீவிரமாக இருப்பதாக குற்றம் சாட்டிய ஈஸ்வரன், அவர் குரல் தான் எதிர்க்கட்சி குரலாக ஒழிக்க வேண்டும், அதிமுக எதிர்க்கட்சியாக வரக்கூடாது என தெளிவாக இருக்கிறார் என்றார். திமுக கூட்டணியில் தான் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இருந்து கொண்டு இருப்பதாகவும், 100 சதவீத வெற்றியை கொங்கு மண்டலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பெறுவோம் என்றார்.