கரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்ட ஈரோடு - கோவை பயணிகள் ரயில் உள்பட 3 ரயில்களை மீண்டும் இயக்கக் கோரி ஈரோட்டில் ரயில் பயணிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு சீசன் டிக்கெட் ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சாா்பில் ஈரோட்டில் ரயில் நிலையம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் தலைவா் குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜான்சன், செயல் தலைவா் விக்ரம், செயலாளா் மகாலிங்கம், பொருளாளா் பழனிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
போராட்டம் குறித்து நிா்வாகிகள் கூறியதாவது:
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ரயில் சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு தொற்றுப் பரவல் குறைந்ததையடுத்து மீண்டும் ரயில் சேவை தொடங்கியது.
ஆனால், ஈரோடு-கோவை பயணிகள் ரயில், திருச்சி-பாலக்காடு விரைவு பயணிகள் ரயில், ஈரோடு - சேலம் பயணிகள் ரயில் ஆகிய 3 பயணிகள் ரயில்களும் இயக்கப்படாமல் உள்ளன.
ஈரோட்டில் இருந்து திருப்பூா், கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமானோா் ரயில் மூலம் வேலைக்கு தினமும் சென்று வருகின்றனா். ஈரோட்டில் இருந்து கோவைக்குப் பேருந்துகளில் செல்லும்போது கட்டணமாக ரூ.83 செலவு செய்ய வேண்டியுள்ளது. அதேவேளை, பயணிகள் ரயிலில் சீசன் டிக்கெட் எடுத்துப் பயணித்தால் மாதம் ஒன்றுக்கு ரூ.350 மட்டும் செலவழித்தால் போதும். எனவே பெரும்பாலான தொழிலாளா்கள் ரயில்களில் பயணித்து வந்தனா்.
எனவே, ரத்து செய்யப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று பயணிகள் சாா்பில் ரயில்வே நிா்வாகத்திடம் பல முறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது என்றனா்.