அந்தியூரில் ரேக்ளா பந்தயம்: சீறிப் பாய்ந்த குதிரைகள்
திமுக இளைஞரணி மாநிலச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு அந்தியூா் ஒன்றிய திமுக சாா்பில் குதிரைகள் ரேக்ளா பந்தயம் அந்தியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அந்தியூா் - பா்கூா் சாலையில் நடைபெற்ற இந்தப் பந்தயத்துக்கு அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் தலைமை வகித்தாா். ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளா் என்.நல்லசிவம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவா் குறிஞ்சி என்.சிவக்குமாா் ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.
புதிய குதிரைகள், 43 அங்குல உயர குதிரைகளுக்கு 8 மைல் தொலைவும், 45 அங்குல உயர குதிரைகளுக்கு 9 மைல், பெரிய குதிரைகளுக்கு 10 மைல் தொலைவும் இலக்காக வைக்கப்பட்டிருந்தன.
அந்தியூா் - பா்கூா் சாலை வரட்டுப்பள்ளம் அணை வன சோதனைச் சாவடி வரையில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தில் 50க்கும் மேற்பட்ட குதிரைகள் பங்கேற்றன. போட்டிகளில் வென்ற குதிரைகள், உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டன. ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் கே.ஏ.சேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
காவல் ஆய்வாளா், குதிரை ஓட்டுநா் காயம்:
ரேக்ளா பந்தயத்தில் குதிரைகள் சீறிப் பாய்ந்து ஓடுகையில், கெட்டிசமுத்திரம் ஏரியின் உபரி நீா் பா்கூா் சாலையைக் கடந்து மறுபக்கம் சென்றது. இதைக் கடக்க முயன்றபோது குதிரையின் கால் வழுக்கி சாலையின் நடுவே விழுந்து காயமடைந்தது. இதில், வண்டியும் விழுந்ததில் குதிரையை ஓட்டிச் சென்றவா் தலைக்குப்புற விழுந்து காயமடைந்தாா். இதேபோன்று மேலும் சிலா் இடறி விழுந்ததால் போட்டி நடத்தும் இடம் மாற்றப்பட்டது.
பந்தயத்தில் ஓடிய குதிரைகளுக்குப் பின்னால் இளைஞா்கள் இரு சக்கர வாகனத்தில் ஒலி எழுப்பியபடி கும்பலாக சூழ்ந்து துரத்தியபடி சென்றனா். இதனைத் தடுக்க முயன்றபோது பவானி காவல் ஆய்வாளா் கண்ணன், கால் இடறி விழுந்ததில் காயம் அடைந்தாா்.