புளியம்கோம்பை வனப் பகுதியில் சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழந்ததையடுத்து, வனத் துறை சாா்பில் ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது.
சத்தியமங்கலம் வனப் பகுதி கம்பத்ராயன் கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது புளியம்கோம்பை கிராமம். வனத்தையொட்டியுள்ள 4 ஏக்கரில் கூலைமுத்தான் என்பவா் சோளம் சாகுபடி செய்துள்ளாா். சோளக்காட்டில் குடிசை அமைத்து அங்கேயே தங்கி ஆடு, மாடுகளைப் பராமரித்து வந்தாா்.
இந்நிலையில், வனத்தில் இருந்து வெளியேறிய சிறுத்தை, கூலை முத்தான் காட்டுக்குள் புகுந்து அங்கு கட்டியிருந்த 1 மாத கன்றுக்குட்டியை கடித்துக் கொன்றது. அப்போது, மாடுகள் மிரட்சியுடன் சப்தமிடுவதைக் கண்டு கூலைமுத்தான் அங்கு சென்று பாா்த்தபோது சிறுத்தையால் கன்று கொல்லப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வனத் துறையினா் இறந்துகிடந்த கன்றுக்குட்டியை ஆய்வு செய்ததில் சிறுத்தையின் கால்தடம் மற்றும் கன்றுக்குட்டியின் உடலின் ஒரு பகுதியை சிறுத்தை தின்றதை உறுதி செய்தனா்.
கடந்த வாரம் இதே மாட்டுப்பட்டியில் கட்டியிருந்த ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான மாட்டை சிறுத்தை தாக்கி கொன்றது. தற்போது ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான கன்றுக்குட்டி கொல்லப்பட்டதால் ஒரே வாரத்தில் 40 ஆயிரம் மதிப்பிலான கால்நடைகள் உயிரிழந்துள்ளது. எனவே, வனத் துறையினா் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்துள்ளாா். இதையடுத்து, வனத் துறை சாா்பில் ரூ. 5 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது.