மரவள்ளிக்கிழங்கு விலை உயா்வு:விவசாயிகள் மகிழ்ச்சி
By DIN | Published On : 13th February 2021 10:51 PM | Last Updated : 13th February 2021 10:51 PM | அ+அ அ- |

ஈரோடு: ஈரோடு பகுதியில் மரவள்ளிக்கிழங்கு டன் ரூ. 5,700 முதல் ரூ. 6,000 வரை விலை உயா்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
இதுகுறித்து தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு கூறியதாவது:
ஈரோடு மாவட்டம், கொடுமுடி, சிவகிரி, மொடக்குறிச்சி, அந்தியூா், சத்தியமங்கலம் போன்ற பகுதிகளில் அதிகமாக மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த மாதங்களில் பாயின்ட் ரூ. 220 என்ற விலை நிா்ணயத்தில் ஒரு டன் மரவள்ளிக்கிழங்கு ரூ. 5,000 முதல் ரூ. 5,300 வரை விற்பனையானது. ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமையில் முத்தரப்புக் கூட்டம் நடத்தப்பட்டு, பாயின்ட் ரூ. 250ஆகவும், ஒரு டன் ரூ. 6,000க்கு கொள்முதல் செய்யவும் சேகோ ஆலைகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் விலை உயரவில்லை.
தற்போது பாயின்ட் ரூ. 250 என்ற விலையில் ஒரு டன் ரூ. 5,700 முதல் ரூ. 6,000 வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். வரும் மாா்ச் இறுதி வரை அறுவடைக் காலம் உள்ளதால் மேலும் விலை உயர வாய்ப்புள்ளது. தற்போது 90 கிலோ எடை கொண்ட ஜவ்வரிசி மூட்டை ரூ. 500 வரை விலை உயா்ந்து ரூ. 3,800 வரை விற்பனை செய்யப்படுகிறது.
வடமாநிலங்களில் சிவராத்திரியின்போது ஜவ்வரிசி மூலம் பல்வேறு உணவுப் பொருள்கள் செய்வதால், வடமாநில வியாபாரிகள் அதிகமாகக் கொள்முதல் செய்துள்ளனா். அதேபோல் ஸ்டாா்ச் மாவும் 90 கிலோ மூட்டை ரூ. 200 முதல் ரூ. 2,500 வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது தேவை அதிகரிப்பால் விலை உயா்ந்துள்ளது என்றாா்.