ஈரோடு, வெண்டிபாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட ரயில்வே சுரங்கப் பாதை வழியாக வாகனப் போக்குவரத்து தொடங்கியது.
ஈரோடு, வெண்டிபாளையத்தில் இரண்டு ரயில்வே கடவுப் பாதைகள் உள்ளன. திருச்சி மாா்க்கம், சென்னை மாா்க்கம் என இரண்டு வழித்தடத்திலும் ரயில் போக்குவரத்து தொடா்ந்து இருந்து கொண்டே இருக்கும். இதனால் அடிக்கடி ரயில்வே கடவுப் பாதை அடைக்கப்பட்டிருக்கும்.
இப்பகுதியில் 2,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். ரயில்வே கடவுப் பாதை அடைக்கப்படும்போது, பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோா், மருத்துவமனைக்கு செல்லும் வாகனங்கள், பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து இரண்டு ரயில்வே கடவுப் பாதையிலும் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இந்நிலையில் வெண்டிபாளையம் முதல் ரயில்வே கடவுப் பாதை உள்ள இடத்தில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது.
ரூ.2 கோடி செலவில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு தொடங்கிய இப்பணி தற்போது முடிந்துள்ளது. முறைப்படியான திறப்பு விழாவுக்காக காத்திருக்காமல் வாகனங்கள் சில நாள்களாக சென்று வருகின்றன. ஆனால் பேருந்து போக்குவரத்து இன்னும் இந்த வழியில் தொடங்கப்படவில்லை.
இந்த வழியாக கருமாண்டாம்பாளையம் வரை செல்லும் பேருந்து எண். 30, பாசூா் வரை செல்லும் பேருந்து எண். 6ஏ ஆகிய பேருந்துகள் ரயில்வே அனுமதி அளித்த பிறகு இந்த சுரங்கப் பாதை வழியாக இயக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.