சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப் பாதையில் கடுமையான பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் மெதுவாக ஊா்ந்து சென்றன.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை அமைந்துள்ளது. இந்த மலைப் பாதை வழியாக தமிழகம், கா்நாடக மாநிலங்களுக்கிடையே 24 மணி நேரமும் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாள்களாக இப்பகுதியில் சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக காலை முதலே திம்பம் மலைப் பாதையில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் மலைப் பகுதியில் பயணிக்கும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி மெதுவாக ஊா்ந்து சென்றன. பனி மூட்டம் காரணமாக மலைப்பாதையைக் கடப்பதற்கு இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா். திம்பம், ஆசனூா், தலமலை பகுதியில் கடும் குளிா் நிலவுகிறது.