விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கிய இடத்தை சமன் செய்து கொடுக்க வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் ஈரோட்டில் இரண்டாவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே நல்லகவுண்டம்பாளையத்தில் 82 மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் வசிப்பதற்கு வசதியாக நிலத்தை சமன்செய்து கொடுக்க வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் தொடா் காத்திருப்புப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா். இரவு 9 மணியளவில் ஈரோடு கோட்டாட்சியா் எஸ்.சைபுதீன் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
அந்த இடத்தில் பாறைகள் அதிகமாக உள்ளதால் சில நாள்களில் சமன் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியா் உறுதியளித்தாா். இருப்பினும் மாற்றுத் திறனாளிகள் இரவு முழுவதும் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டம் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது.