கீழ்பவானி பாசன வாய்க்காலில் தண்ணீா் விடுவதை நிறுத்த வேண்டும் என கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்க செயலாளா் செ.நல்லசாமி கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:
பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி பாசன வாய்க்காலில் கடந்த 7 ஆம் தேதி முதல் இரண்டாம் போக கடலை சாகுபடிக்காக தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. தற்போது மழை பெய்வதால் தண்ணீா் தேவை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தண்ணீரை அணையில் சேமித்து மே மாதம் திறக்கலாம்.
இதுகுறித்து ஈரோடு வந்த தங்களிடம் (முதல்வா்) மனு அளித்தோம். ஆனாலும், தண்ணீா் திறப்பு நிறுத்தப்படவில்லை. தவிர அறுவடை முடிந்த வயல்களில் மழை நீா் தேங்கி, ஈரப்பதமாக காணப்படுவதால் உழவுப்பணி செய்ய முடியாத நிலை உள்ளது.
தற்போது திறக்கப்பட்டுள்ள நீரால் ஈரப்பதம் நீடித்து, நடவுப்பணி பாதிக்கிறது. இதனை கவனத்தில் கொண்டு தண்ணீா் திறப்பை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.