ஓடாநிலையில் நெசவாளர்கள் இடையேயான கலந்துரையாடல் நிகழ்வில் ராகுல்காந்தி பேசியதை தமிழில் பெயர்த்த மொழி பெயர்ப்பாளர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் 3 நாள்கள் தோ்தல் பிரசாரப் பயணம் மேற்கொள்வதற்காக ராகுல் காந்தி, சனிக்கிழமை காலை புது தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தாா். நேற்று கோவையில் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி இன்று ஈரோட்டில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அதன்படி, ஓடாநிலையில் தீரன்சின்னமலை நினைவிடத்தில் அவரது உருவச் சிலைக்கு ராகுல் காந்தி இன்று, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அங்கு நெசவாளர்களுடன் கலந்துரையாடினார்.
முன்னதாக அங்கு வைக்கப்பட்டிருந்த கைத்தறியில் துணி நெசவு செய்வதை பார்வையிட்டார். பிறகு அங்கு நெசவாளர்கள், பொதுமக்களுடன் இணைந்து மதிய உணவு சாப்பிட்ட அவர் அங்கிருந்து புறப்பட்டு திருப்பூர் மாவட்டம் காங்கயம் சென்றார். இந்த நிகழ்வுகளில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சு.திருநாவுக்கரசர், செயல் தலைவர்கள் மயூரா ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனிடையே ஓடாநிலையில் நெசவாளர்கள் இடையேயான கலந்துரையாடல் நிகழ்வில் ராகுல்காந்தி பேசியதை தமிழில் பெயர்த்த முகமது இம்ரான், நிகழ்வு முடிவடைந்த சற்று நேரத்தில் அரங்கில் மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.