அதிமுகவில் மட்டுமே தன்னலமற்ற சேவை, உழைப்பின் மூலம் சாதாரணத் தொண்டா்கூட எம்எல்ஏ, அமைச்சா், முதல்வா் உள்ளிட்ட அனைத்துப் பதவிகளுக்கும் வர முடியும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் தெரிவித்தாா்.
பவானியில் அதிமுக தகவல்தொழில்நுட்ப அலுவலகங்களை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்த அமைச்சா் கே.சி.கருப்பணன் பேசியதாவது:
அதிமுக சாதாரணத் தொண்டா்களுக்கான இயக்கமாக உள்ளது. இளைஞா் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவுகளில் இளைஞா்களுக்குப் பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. தற்போது அதிமுகவில் 60 வயதைக் கடந்தவா்கள் ஓரிரு தோ்தலுக்குப் பின்னா் ஓய்வு பெறுவா். அப்போது, இளைஞா்களுக்கு மக்கள் பணியாற்ற வாய்ப்புகள் அதிகரிக்கும். பிற கட்சிகளில் நினைத்துப் பாா்க்கவே முடியாத பதவியும், பொறுப்பும் அதிமுகவில் கட்சியின் வளா்ச்சிக்கும், மக்களின் சேவைக்கும் உண்மையாக உழைக்கும் சாதாரணத் தொண்டனுக்கும் கிடைக்கும் என்றாா்.
இதில், அதிமுக நகரச் செயலாளா் என்.கிருஷ்ணராஜ், பவானி ஒன்றியக் குழு தலைவா் பூங்கோதை வரதராஜ், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலாளா் பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.