குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 112 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
ஈரோடு மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) பாலதண்டாயுதம் தலைமையில் தொழிலாளா் துறை துணை ஆய்வாளா்கள், தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் ஆகியோா் குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
ஆய்வின்போது, தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறதா, பணியாளா்கள் பணிபுரிந்தால் அவா்களுக்கு அன்றைய தினம் இரட்டிப்பு ஊதியம் அல்லது மாற்று விடுப்பு வழங்கப்படுகின்றதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம் பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 43 உணவு நிறுவனங்கள், 14 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், பல்வேறு நிறுவனங்கள் என மொத்தம் 112 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காததது கண்டறியப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.