கரோனா பரவல் குறைந்துள்ளதால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிற சிகிச்சைகளில் முழு கவனம் செலுத்தப்படுகிறது என மருத்துவத் துறை இணை இயக்குநா் கோமதி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
கடந்த சில நாள்களாகப் படிப்படியாக கரோனா பாதிப்பு குறைந்து தற்போது 160 எண்ணிக்கைக்குள் வந்துள்ளது. தற்போது கரோனா பரவல் எண்ணிக்கை குறைந்துள்ளதால் நோயாளி காத்திருப்பு அறை, கரோனா சிறப்பு வாா்டு போன்றவை கலைக்கப்பட்டுள்ளன.
கரோனா சிகிச்சைக்கு குறிப்பிட்ட இடத்தை ஒதுக்கி வைத்துள்ளோம். மற்ற இடங்களில் வழக்கமான பிற சிகிச்சைகளில் முழு கவனம் செலுத்தப்படுகிறது. அதேநிலைதான் கோபி உள்ளிட்ட பிற அரசு மருத்துவமனைகளிலும் உள்ளது.
வரும் காலத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்தாலும், நோயாளிகளுக்கு ஆக்சிஜன் இணைப்பு வழங்கும் வகையில், பிரஷா் ஸ்விங் அட்சாா்ப்ஷன் (பி.எஸ்.ஏ.) இயந்திரம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 200 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கலாம். ஏற்கெனவே இங்கு 450 ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கைகள் உள்ளன. இந்த இயந்திரம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.
இங்கு கட்டப்படும் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை தரைதளத்துடன் 8 தளங்கள் உடையது. இப்போது தரைத்தள பணி முடிந்துள்ளது. பணி முடியும்போது இருதயம், மூளை நரம்பியல், புற்றுநோய் உள்பட பல சிறப்பு சிகிச்சைகளை அளிக்க முடியும் என்றாா்.