பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமானத் தொழிலாளா்களுக்கு நல வாரியங்கள் மூலம் நிவாரணம் வழங்க வேண்டும் என ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஏஐடியூசி தலைவா் சின்னசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் கரோனா தொற்று தடுப்புப் பணிகளை போா்க்கால வேகத்தில் மேற்கொண்டு வரும் தமிழக அரசுக்கு ஏஐடியூசி ஈரோடு மாவட்டக் குழு சாா்பில் பாராட்டுகளைத் தெரிவித்து கொள்கிறோம். கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாட்டில் தளா்வுகளற்ற முழு பொதுமுடக்கம் அமலாக்கப்பட்டு வருகிறது.
தற்போது மேலும் ஒரு வாரகாலத்துக்கு பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான தொழிலாளா்கள் வேலையின்றி, வருமானமின்றி பாதிக்கப்பட்டு வருகின்றனா். பொது முடக்கக் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டாலும் இயல்பு நிலைக்குத் திரும்ப கூடுதல் காலமாகும். இதனால், தொழிலாளா்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டியது அவசியமாகிறது.
பொது முடக்க காலத்தில் முற்றிலுமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு தொழிலாளா்கள் நல வாரியங்கள் மூலம் ரூ. 7,500 நிவாரண நிதி வழங்க முதல்வா் அறிவிப்பு வெளியிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.